Saturday, October 31, 2009

துன்ஹிந்த நீர்வீழ்ச்சி


தண்ணீர் ஊற்றி
வளர்த்த மரமல்ல - இது
தண்ணீராகவே
வளர்ந்த மரம்.



இந்த அதிசய விளக்கில்
எண்ணையே தீபமாக
எரிகிறது,
தீபமே எண்ணையாக
வழிகிறது.



அந்த மலைநாட்டு(ப்)
பால்காரன்
பாலில் தண்ணீரைக்
கலக்கவில்லை,
தண்ணீரில் பாலைப்
பிரிக்கிறான்.



எத்தனை வருடங்களாய்
மலையகத்தின்
கலையகத்தில்
இந்த அற்புத நடனம்
அரங்கேறுகிறது....
அடடா,
அங்கே பாறைகளில்
எதிரொலிப்பது
இரசிகர்களின்
கை தட்டல்கள் தானா?



வெள்ளை நிறத்தில்
வானவில் ஒன்று - இது
கண்ணுக்கு விருந்தாகும்!
கவலைக்கும் மருந்தாகும்!!



தற்கொலை புரிவதிலும்
இத்தனை ஆனந்தமா...
வீழ்ச்சியிலும் சிரிக்கிறாய்!!
புதிய கீதை
போதிக்கிறாய்!!



எல்லாம் சரி பெண்ணே..
பாறை இடுக்குகளில் நீ
ஆனந்த கானம் தான்
மீட்டுகிறாய்...
எவரைப் பிரிந்ததற்காய்
வெள்ளைப் புடவை
உடுத்துகிறாய்??

--------------------(c)Viviktha - 1998

2 comments:

Ramesh said...

மிக நன்றாக இருக்கிறது .......... வரிகளில் வளைந்த்தோடி இருக்கிறீர்கள் இல்ல நதிகளில்

விவிக்தா said...

நன்றி Ramesh. இது 1998 ல் நான் எழுதியது.. இப்பொழுது இப்படி வரிகள் வருமா என்று எனக்கும் கூட ஒரு சின்ன சந்தேகம் உண்டு!