Saturday, October 31, 2009

துன்ஹிந்த நீர்வீழ்ச்சி


தண்ணீர் ஊற்றி
வளர்த்த மரமல்ல - இது
தண்ணீராகவே
வளர்ந்த மரம்.



இந்த அதிசய விளக்கில்
எண்ணையே தீபமாக
எரிகிறது,
தீபமே எண்ணையாக
வழிகிறது.



அந்த மலைநாட்டு(ப்)
பால்காரன்
பாலில் தண்ணீரைக்
கலக்கவில்லை,
தண்ணீரில் பாலைப்
பிரிக்கிறான்.



எத்தனை வருடங்களாய்
மலையகத்தின்
கலையகத்தில்
இந்த அற்புத நடனம்
அரங்கேறுகிறது....
அடடா,
அங்கே பாறைகளில்
எதிரொலிப்பது
இரசிகர்களின்
கை தட்டல்கள் தானா?



வெள்ளை நிறத்தில்
வானவில் ஒன்று - இது
கண்ணுக்கு விருந்தாகும்!
கவலைக்கும் மருந்தாகும்!!



தற்கொலை புரிவதிலும்
இத்தனை ஆனந்தமா...
வீழ்ச்சியிலும் சிரிக்கிறாய்!!
புதிய கீதை
போதிக்கிறாய்!!



எல்லாம் சரி பெண்ணே..
பாறை இடுக்குகளில் நீ
ஆனந்த கானம் தான்
மீட்டுகிறாய்...
எவரைப் பிரிந்ததற்காய்
வெள்ளைப் புடவை
உடுத்துகிறாய்??

--------------------(c)Viviktha - 1998

Saturday, October 3, 2009

மெழுகுதிரியா களிமண்ணா உறுதியான காதல்....

நீ மெழுகாக,
நான் திரியாக,
நாம் மெழுகுதிரியாக
நம் காதல் சில காலம்.

நீ உருகிவிட்டாய்,
நான் கருகிவிட்டேன்,,
பின்னர் ஒரு நாளில்
யாரோ கிழித்த தீக்குச்சியால்.

மெழுகு உருக
திரி எரிந்ததா...
திரி எரிய
மெழுகு உருகியதா..

தம் காதல் தோல்விக்கு
தீக்குச்சிதான் காரணமா?

அடுத்தவர் சதியில்
உருகும் காதல் வேண்டாம்,
இறுகும் காதல் வேண்டும்.

மெழுகு போல் அல்ல!
களிமண் போல!!